இன்றைய சூழலில் அனைவருக்கும் இணையமும் அத்தியாவசியமான ஒன்றாகவே இருக்கிறது. தொடர்ந்து தொழில்நுட்பம் கொண்டு கல்வியை மேம்படுத்துவதில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் இருந்துவருகிறது.
பாலிடெக்னிக், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தினமும் 2 GB டேட்டா வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாகக் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் இணைய வழி வகுப்புகள் மூலமே கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அமையும் எனத் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
“கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காகக் கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (2GB Data) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Card) வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்கிறது எடப்பாடியின் அறிக்கை.